செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து: ஆம்னி பஸ் புகுந்ததில் வாலிபர் பலி

Published On 2018-08-03 09:13 GMT   |   Update On 2018-08-03 09:13 GMT
உளுந்தூர்பேட்டை அருகே பயணிகள் கூட்டத்தில் ஆம்னி பஸ் புகுந்த விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை:

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது. அந்த பஸ் நள்ளிரவு 1 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே செக்குறிச்சி என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று பழுதானது.

உடனே டிரைவர் அந்த பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து கொடைக்கானல் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வேகமாக வந்தது. அந்த பஸ் திடீரென்று பழுதாகி நின்ற அரசு பஸ் மீது மோதி விட்டு அருகில் நின்று கொண்டிருந்த பயணிகளின் கூட்டத்தில் புகுந்தது.

இதில் விக்னேஷ்குமார் (வயது 19) என்ற வாலிபர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த 5 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tags:    

Similar News