செய்திகள்

முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி மர்ம மரணம்

Published On 2018-08-03 07:18 GMT   |   Update On 2018-08-03 07:18 GMT
முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார். #Deathcase

முதுகுளத்தூர்:

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 74). இவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரி ஆவார்.

இவரது வீட்டில் நேற்று முன்தினம் 6 பவுன் நகை, ரூ.13 ஆயிரம், ஏ.டி.எம். கார்டுகள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த திருட்டு வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மாசிலா மணிமகன் மணிகண்டன் (30) என்பவரை போலீசார் பிடித்துச் சென்றனர். அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விசாரணை கைதி மணிகண்டன் மர்மமான முறையில் போலீஸ் நிலையத்திலேயே இறந்தார்.

அவர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது தெரியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்ததும் மணிகண்டனின் உறவினர்கள் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விட மறுத்ததுடன் நுழைவுவாயில் கதவை பூட்டினர். மேலும் உறவினர்களிடம் எந்தவித தகவலும் கூற மறுத்து விட்டனர்.

இறந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தால் பிரச்சினை ஏற்படும் என்று கருதி பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேரடி விசாரணை நடத்தினர். மேலும் முதுகுளத்தூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் முதுகுளத்தூரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Deathcase

Tags:    

Similar News