செய்திகள்

தருமபுரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தாய்-மகன் பலி

Published On 2018-08-03 12:30 IST   |   Update On 2018-08-03 12:30:00 IST
தருமபுரி அருகே விபத்தில் தாய் மற்றும் மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த உச்சியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி சரோஜா (வயது45).

இவர்களது மகன் காளியப்பன் (19). இவர் தருமபுரியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை சரோஜாவும், காளியப்பனும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கம்பைநல்லூருக்கு மாவு அரைக்க வந்தனர்.

பின்னர் மாவு அரைத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பி சென்றனர். அப்போது கம்பைநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து காளியப்பன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காளியப்பன், சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News