செய்திகள்

புதுவையில் நடந்த அரசியல் பிரச்சனைக்கு தீர்வு- 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வந்தனர்

Published On 2018-08-01 04:43 GMT   |   Update On 2018-08-01 04:53 GMT
3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபையில் அனுமதி அளித்ததன் மூலம் புதுவையில் ஒரு ஆண்டாக நீடித்து வந்த அரசியல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. #NominatedMLAs #PondicherryAssembly
புதுச்சேரி:

புதுவையில் மாநில அரசின் சிபாரிசு இல்லாமலேயே மத்திய அரசு பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

அவர்களை அங்கீகரிக்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் அவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்கவில்லை.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனமும் செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதன்பிறகும் அவர்களை சபாநாயகர் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் இதன் அப்பீல் வழக்கு நடந்து வருகிறது. அதில் நீதிபதிகள் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படாததால் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்கலாம். அதற்கு சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இந்த நிலையில் புதுவை சட்டசபை கூட்டம் கடந்த 19-ந்தேதி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் பட்ஜெட்டுக்கு அனுமதி தராததால் பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

அதன்பிறகு கவர்னர் பட்ஜெட்டுக்கு அனுமதி அளித்தார். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருந்தார்.

அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் பங்கேற்க செய்வது என்றும் முடிவெடுத்தனர்.

இதற்காக சட்டசபை செயலாளர் மூலம் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

பட்ஜெட் மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. கூட்டம் தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் வந்தனர்.


அவர்கள் நேராக சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினார்கள். பின்னர் 9.25 மணியளவில் சட்டசபை கூட்ட அறைக்குள் 3 எம்.எல்.ஏ.க்களும் வந்தனர். அவர்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்று அமர்ந்தனர். சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

சட்டசபையில் பட்ஜெட் மசோதாவை நிறைவேற்ற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. குரல் ஓட்டெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் சபை காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டது.

3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் அனுமதி அளித்ததன் மூலம் புதுவையில் ஒரு ஆண்டாக நீடித்து வந்த அரசியல் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. #NominatedMLAs #PondicherryAssembly
Tags:    

Similar News