செய்திகள்

பயணிகள் ஓய்வறையை பூட்டி வைத்திருந்த அதிகாரிக்கு ரூ.19 ஆயிரம் அபராதம்- நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-07-31 06:02 GMT   |   Update On 2018-07-31 06:02 GMT
பயணிகள் ஓய்வறையை பூட்டி வைத்திருந்த ரெயில் நிலைய அதிகாரிக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்:

பேரணாம்பட்டு சின்னதாமல் செருவு கிராமத்தை சேர்ந்தவர் வி.ஏ.மார்கபந்து (வயது 80), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி தனது மனைவியுடன் வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து கடலூருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்தார். அதன்படி மார்கபந்து, மனைவியுடன் ரெயில் நிலையத்துக்கு 23-ந் தேதி வந்தார்.

ரெயில் வருவதற்கு சுமார் 1½ மணி நேரம் இருந்ததால், அங்குள்ள முன்பதிவு பயணிகள் அறையில் ஓய்வு எடுக்க மார்கபந்து, தனது மனைவியுடன் சென்றார். ஆனால் முன்பதிவு பயணிகள் அறை பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர், ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராமனை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார். அதற்கு அவர் ரெயில் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் முன்பதிவு பயணிகள் அறை திறக்கப்படும் என்று கூறி, அறையை திறக்க மறுத்து விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த மார்கபந்து மற்றும் அவரது மனைவியும் ரெயில் நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர்.

இந்த சம்பவத்தால் மனஉளைச்சல் அடைந்த மார்கபந்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், முன்பதிவு பயணிகள் அறையை திறக்க மறுத்தது மற்றும் உரிய சேவை வழங்காததால் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிள்ளிவளவன், ரெயில் பயணிகளுக்கு உரிய சேவை வழங்காததற்காக ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராஜனுக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை மார்கபந்துக்கு வழங்கும்படி தீர்ப்பு கூறினார்.

ரெயில் நிலைய அதிகாரி சுந்தரராஜன் தற்போது கணியம்பாடியில் பணிபுரிந்து வருகிறார்.
Tags:    

Similar News