செய்திகள்

மதுரையில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 9 பவுன் நகை அபேஸ்

Published On 2018-07-30 11:10 GMT   |   Update On 2018-07-30 11:10 GMT
அவனியாபுரத்தில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 9 பவுன் நகையை டிப்-டாப் ஆசாமிகள் பறித்து சென்றனர்.

அவனியாபுரம்:

அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி கமலா (65). இவர் இன்று காலை கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் டிப்-டாப் உடை அணிந்து வந்தனர்.

அவர்கள் கமலாவிடம் நாங்கள் போலீஸ் என்றும், தி.மு.க. தலைவர் கருணா நிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் நிலவுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கழுத்தில் நகை அணிந்து செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தனர். இதனை நம்பிய கமலா தனது கழுத்தில் கிடந்த நகை, வளையல்கள் என 9 பவுன் நகைகளை கழற்றி அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார்.

நீங்கள் முன்னால் செல்லுங்கள் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக நகையுடன் பின்னால் வருகிறோம் என்று 2 வாலிபர்களும் கூறி உள்ளனர். இதை நம்பி கமலா சென்றார். சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்த்தபோது வாலிபர்கள் மாயமாகி இருந்தனர்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைகளை அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News