செய்திகள்

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி அருகே விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

Published On 2018-07-29 10:37 GMT   |   Update On 2018-07-29 10:37 GMT
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி அருகே விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி. புறநகர் பகுதி மற்றும் வேடசந்தூர், வத்தலக்குண்டு, அய்யலூர், வடமதுரை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் அவரது உறவினர்கள் என எப்போதுமே ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படும்.

திருச்சி சாலை, சத்திரம் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போலீசார் இப்பகுதியில் ஒருவழிச்சாலை அமல்படுத்தி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.

ஆனால் சில தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் விதிகளை மீறி நிறுத்திச்செல்வதால் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையின் நடுவிலேயே வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் மற்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பஸ்கள் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தில் தனியார் பஸ்கள் பலமணி நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரி முன்பு வாகன நெரிசல் ஏற்படுகிறது.

ஆம்புலன்ஸ் கூட செல்லமுடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே விதிமீறி நிறுத்தப்படும் பஸ்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News