செய்திகள்
மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: லாரி டிரைவர் கைது
தக்கலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை கைது செய்தனர்.
தக்கலை:
தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சித்திரங்கோட்டில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு டாரஸ் லாரி வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள். அந்த லாரியை செண்பகராமன் புதூரை சேர்ந்த டிரைவர் வெங்கடேஷ் ஓட்டிவந்தார்.
மேலும் அந்த லாரியில் போலீசார் சோதனை செய்த போது அதில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. ஆனால் ஆற்று மணலை கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் லாரி டிரைவர் வெங்கடேசிடம் இல்லை.
இதைதொடர்ந்து மணல் கடத்திய லாரியையும், அதன் டிரைவர் வெங்கடேசையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது டிரைவர் வெங்கடேஷ் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேசுக்கு அவர் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி தக்கலை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் புகார் செய்தார். இதைதொடர்ந்து லாரி டிரைவர் வெங்கடேசை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.