செய்திகள்

கடையநல்லூர் அருகே செல்போன் கொள்ளையன் கைது- 25 செல்போன்கள் பறிமுதல்

Published On 2018-07-24 12:06 GMT   |   Update On 2018-07-24 12:06 GMT
கடையநல்லூர் பகுதியில் விலை உயர்ந்த செல்போன்கள் திருட்டு போன சம்பவம் குறித்து கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடையநல்லூர்:

கடையநல்லூர் பகுதியில் சமீபகாலமாக விலை உயர்ந்த செல்போன்கள் திருட்டு போயின. சொக்கம்பட்டி அருகே உள்ள திருவேட்ட நல்லூர் பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு வீட்டில் செல்போன் திருட்டு போனது. இதுபற்றி சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் கொள்ளையன் விட்டு சென்ற அவனது செல்போன் சிக்கியது. அதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சிவராம பேட்டையை சேர்ந்த கைலாசசுந்தரம் (வயது27) என்பவர் தான் செல்போன்கள் திருடியது தெரியவந்தது. திருடிய செல்போன்களை அவர் கேரளாவுக்கு கொண்டு சென்று விற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கைலாச சுந்தரத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சம்பவத்தன்று சொக்கம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
Tags:    

Similar News