செய்திகள்

பொன்னேரி அருகே குடும்பத்தகராறில் காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி தற்கொலை

Published On 2018-07-24 06:14 GMT   |   Update On 2018-07-24 06:14 GMT
பொன்னேரி அருகே குடும்பத்தகராறில் காதல் திருமணம் செய்த கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicidecase

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த கேசவபுரத்தை சேர்ந்தவர் ஜெய் வெங்கடேஷ் (வயது 24). லிப்ட் மெக்கானிக். இவரும் வாணியம்பாடியைச் சேர்ந்த தனலட்சுமியும் (20) கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பு மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

நள்ளிரவில் ஜெய் வெங்கடே‌ஷன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி தனலட்சுமி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று இறந்தார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்பட வில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது ஜெய் வெங்கடேசனும், தனலட்சுமியும் தற்கொலை செய்து கிடப்பது தெரிந்தது.

இது குறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனலட்சுமி உடல் முழுவதும் மண்ணெணையாக இருந்தது. முதலில் அவர் மண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. பின்னர் அதனை செய்ய முடியாமல் மாத்திரைகளை தின்று தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

ஜெய் வெங்கடேசனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இதற்காக அவர்கள் வீட்டில் கேக் வாங்கி வைத்திருந்தனர். காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #suicidecase

Tags:    

Similar News