செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே டெய்லர் கொலையில் மேலும் 3 பேர் கைது

Published On 2018-07-20 10:19 GMT   |   Update On 2018-07-20 10:19 GMT
ஜோலார்பேட்டை அருகே டெய்லர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 34). இவரை கடந்த ஆண்டு முன்விரோத தகராறில் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுதீஷ் உள்பட 6 பேரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளி வந்தனர். பின்பு சுதீஷ் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே முனிராஜின் தம்பி கார்த்தி (24) கடந்த 10ந் தேதி நடந்த முனிராஜின் திதி வழிபாட்டின் போது அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குவதாக சபதம் எடுத்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சுதீஷை கார்த்திக் உள்பட 5 பேர் கும்பல் வழி மறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சுதீஷை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுதீஷ் இறந்தார்.

இது குறித்து ஜோலார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தி அவரது நண்பர் சிவா(27) ஆகியோரை கடந்த 17ந் தேதி கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த நந்தகுமார் (23), சிலம்பரசன் (25), தங்கபாலு (24) ஆகிய 3 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News