செய்திகள்
திருப்பத்தூர் அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறிய தொழிலாளி பலி
திருப்பத்தூர் அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறிய தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 55). கட்டிட தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மன நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற கருப்பையா அதன்பின் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் தென் கரை கண்மாய் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் சிக்கிய முதியவர் பிணமாக தொங்குவதாக நாச்சியார்புரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தது கருப்பையா என தெரியவந்தது.
கருப்பையா மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.