செய்திகள்

பழைய பயண அட்டையை அனுமதிக்ககோரி பஸ்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2018-07-19 15:08 IST   |   Update On 2018-07-19 15:08:00 IST
பழைய பயண அட்டையை அனுமதிக்ககோரி பஸ்களை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவள்ளூர் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
திருவள்ளூர்:

மாணவ-மாணவிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பஸ்சில் பள்ளிக்கு சென்று வர இலவச பயண அட்டைகளை அரசு வழங்கியுள்ளது. ஆண்டுதோறும் புதிய பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான புதிய இலவச பயண அட்டை வழங்கும் வரை பழைய அட்டைகளை காண்பித்து பஸ்களில் பயணம் செய்யலாம் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மாணவர்கள் இன்று காலை பஸ்சில் வந்தனர். அவர்களிடம் புதிய இலவச பயண அட்டை இல்லை என்று கூறிய கண்டக்டர், மாணவர்களை கீழே இறக்கி விட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் உள்ள பஸ்களை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்து பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்டக்டர்கள் மீது மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து பஸ் கண்டக்டர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அரசு உத்தரவுப்படி மாணவர்களை பஸ்சில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News