செய்திகள்

புதுக்கோட்டை சிப்காட் அருகே சாலையில் கார் கவிழ்ந்து பெண் பலி: 6 பேர் படுகாயம்

Published On 2018-07-14 13:05 GMT   |   Update On 2018-07-14 13:05 GMT
புதுக்கோட்டையில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பெண் பலியானார். பெண் பார்க்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அசோக்நகரை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 74). இவரது உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ளனர். இந் நிலையில் மீனாட்சி அவர்களை பார்க்க செஞ்சிக்கு சென்றார். பின்னர் உறவினர்கள் ஜெயந்தி (60), ஜெயலட்சுமி,  நிசாந்தன் (1) சாரதா உள்பட 5 பேருடன் ஒரு வாடகை காரில் திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக புதுக்கோட்டைக்கு சென்றனர். காரை செல்வம் என்பவர் ஓட்டினார்.

கார் இன்று அதிகாலை திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை சிப்காட் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக  ஓடி சாலையில் ஒரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மீனாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த ஜெயந்தி, ஜெயலட்சுமி, நிசாந்தன், சாரதா, கார் டிரைவர் செல்வம் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மீனாட்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News