செய்திகள்

தூத்துக்குடியில் விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் புல்வெட்டும் கருவி- கலெக்டர் தகவல்

Published On 2018-07-13 11:36 GMT   |   Update On 2018-07-13 11:36 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கு 75 சதவீதம் மானியத்தில் மின்சாரத்தில் இயங்கும் புல்வெட்டும் கருவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய கால்நடை குழுமத்தின் 2017-18ம் ஆண்டு திட்டப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு 75 சதவீதம் மானியத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரத்தில் இயங்கும் புல்வெட்டும் கருவி வழங்கப்பட உள்ளது.

இந்த கருவியை பெற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் 2 கால்நடைகள் வளர்ப்போர்கள், 0.5 ஏக்கர் புல்வளர்ப்புக்கு இடம் மற்றும் புல்வெட்டும் கருவிக்கு 25 சதவீதம் தொகையை செலுத்த விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மேலும், சுயஉதவிக்குழு உறுப்பினர் ஒரு கால்நடை வளர்ப்போராகவும், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கு முன்பு இதுபோன்ற சலுகைகளை அரசிடம் இருந்து பெற்றவராக இருக்கக்கூடாது.

மேற்கண்ட தகுதியுடைய, புல்வெட்டும் கருவி தேவைப்படும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அந்தந்த பகுதி கால்நடை மருந்தகத்தில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News