செய்திகள்

ஐகோர்ட்டு தடைவிதித்ததால் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ரத்து

Published On 2018-07-11 10:20 GMT   |   Update On 2018-07-11 10:20 GMT
ஐகோர்ட்டு தடைவிதித்ததால் தமிழகத்தில் வரும் 16-ந்தேதி நடைபெற இருந்த எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. #Highcourt

சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைப்பெற்றது. நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவ- மாணவிகள் அழைக்கப்பட்டனர்.

அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின.

இதனை தொடர்ந்து 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வருகின்ற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. நிர்வாக ஒதுக்கீட்டில் 723 எம்.பி.பி.எஸ். இடங்களும், 645 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. அவற்றை அரசு கலந்தாய்வின் மூலம் கடந்த ஆண்டு முதல் நிரப்பி வருகிறது.

நிர்வாக ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ். கட்டணம் வருடத்திற்கு ரூ.12.5 லட்சமும், பி.டி.எஸ்.க்கு ரூ.6 லட்சமும் அரசு நிர்ணயித்துள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் குளறுப்படி குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை அளித்த தீர்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், கலந்தாய்விற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து 16-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய தரவரிசை பட்டியல் தயாரித்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருப்பதால் கலந்தாய்வு நடைமுறைகள் எதையும் பின்பற்றக் கூடாது. அதனால் சி.பி.எஸ்.இ. அடுத்து என்ன முடிவு எடுக்கிறதோ அதை பொறுத்துதான் எதையும் கூற முடியும். தற்போதைய நிலவரப்படி நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார். #Highcourt

Tags:    

Similar News