செய்திகள்

தேனி அருகே வீட்டில் ஆஸ்பத்திரி நடத்திய போலி டாக்டர் கைது

Published On 2018-07-10 05:33 GMT   |   Update On 2018-07-10 05:33 GMT
தேனி அருகே வீட்டில் ஆஸ்பத்திரி நடத்திய போலி டாக்டர் கைதானார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தமபாளையம்:

தேனி மாவட்டத்தில் உள்ள மலை கிராம பகுதிகளில் வீட்டில் ஆஸ்பத்திரி வைத்து அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாரதிக்கு தகவல் எட்டியது.

அதன் அடிப்படையில் தேனி அருகே தேவாரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தம்மிநாயக்கன்பட்டியில் பாரதி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு ஆபிரகாம் என்பவர் வீட்டில் ஆஸ்பத்திரி வைத்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார்.

அவரை கையும் களவுமாக சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்தனர். உடனடியாக தேவாரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கைதான ஆபிரகாம் பிளஸ்-2 மட்டுமே முடித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி ஆகும். இவரது குடும்பம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்மிநாயக்கன்பட்டிக்கு குடிபெயர்ந்துள்ளது.

மலை கிராம பகுதியில் மருத்துவ வசதி இல்லாததால் ஆபிரகாம் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருந்து, மாத்திரை, ஊசி போட்டுள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News