செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் பயன்பெற தமிழில் புதிய இணையதளம் - கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

Published On 2018-07-07 18:04 GMT   |   Update On 2018-07-07 18:04 GMT
நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெற தமிழில் புதிய இணையதளத்தை நேற்று கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் தேசிய தகவலியல் மையம் சார்பில் https://tirunelveli.nic.in புதிய இணையதளம் தமிழில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணைய தளத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த புதிய இணையதளம் அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுவான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்களை அளித்து கொண்டு இருந்தது.

நெல்லை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய இணையதளம் தமிழிலும் தகவல்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய இணைய தளமானது கணினி மட்டுமின்றி பொதுமக்களின் மடிக்கணினி, செல்போன், ஐபேட் போன்றவைகள் மூலம் எளிதில் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் இந்த இணைய தளத்தை கையாளுவதற்கு பல வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளை பற்றிய முழு விவரங்கள் இந்த புதிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், தேசிய தகவல் மைய முதுநிலை தொழில்நுட்ப இயக்குனர் தேவராஜ், தொழில்நுட்ப இயக்குனர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News