செய்திகள்

மதுக்கடையை மூடக்கோரி அரசு பள்ளியில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2018-07-06 12:06 IST   |   Update On 2018-07-06 12:06:00 IST
திருவள்ளூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே உள்ள பேரம்பாக்கத்தில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

பொருளாதார ஆசிரியர் நியமிக்க வேண்டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிவறை வசதி மற்றும் பள்ளி அருகே உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது பேஸ்புக், வாட்ஸ்- அப்பில் வேகமாக பரவி வருகிறது. வீடியோ காட்சி 6 நிமிடம் ஓடுகிறது.

அதில் மாணவி ஒருவர் ஆவேசமாக பேசுகிறார். சில மாணவிகள் கோரிக்கை குறித்து அட்டையை ஏந்தி நிற்கிறார்கள். அருகில் 50-க் கும் மேற்படட மாணவிகள் கோ‌ஷம் எழுப்புகின்றனர்.

மாணவிகளின் இந்த போராட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்ததாக தெரிகிறது. இதனை மாணவிகளே படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தணி அருகே அரசு பள்ளியில் இடமாறுதல் ஆன ஆசிரியர் பகவானை வெளியே விட மறுத்து மாணவ - மாணவிகள் பாசப் போராட்டம் நடத்திய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News