சென்னையில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி
சென்னை:
சோழிங்கநல்லூர் எழில் நகரை சேர்ந்தவர் மதுர முத்து (33). இவரது மனைவி மணிமாரா (32). மதுரமுத்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார்.
இந்த தம்பதியரின் மகள் ராஜேஸ்வரி (13). சென்னையில் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3-ந்தேதி காய்ச்சலால் அவதிப்பட்ட ராஜேஸ்வரியை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அவரை தாக்கிய காய்ச்சல் பற்றி கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று உடல்நிலை மோசமடைந்த ராஜேஸ்வரி திடீரென்று மரணம் அடைந்தார். மாணவி ராஜேஸ்வரியை ஏதோ ஒருவித மர்ம காய்ச்சல் தாக்கி பலி வாங்கி விட்டதாக பெற்றோர்கள் கதறி அழுதனர்.
டாக்டர்கள் அனைத்து விதமான பரிசோதனைகள் செய்து பார்த்தும் என்ன காய்ச்சல் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.