செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

Published On 2018-07-04 17:15 GMT   |   Update On 2018-07-04 17:15 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை மொத்தம் 247 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
ஊராட்சி செயலாளர்களுக்கு, பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வு கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த உத்தரவிட வேண்டும். 

பல மாவட்டங்களில், எவ்வித விளக்கமும் கோராமல் ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும். காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும். தனி நபர் இல்ல கழிவறைக்கு வழங்கும் மானியத்தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகியவை உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று இச்சங்கத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

 அதன்படி, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலாளர்கள் வரை மொத்தம் 247 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால் அனைத்து பணிகளும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News