செய்திகள்

புதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் மோதலில் விவசாயி வெட்டிக்கொலை

Published On 2018-07-04 14:07 GMT   |   Update On 2018-07-04 14:42 GMT
புதுக்கோட்டை அருகே இரு தரப்பினர் மோதலில் விவசாயி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்வக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புதுநகர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 40), விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவருக்கும் இடத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக நேற்று தோட்டத்தில் வைத்து  இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

 அப்போது அங்கு வந்த சங்கரின் தம்பி சித்திரைவேல் (37) இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் ஆத்திரமடைந்த  சுந்தர்ராஜ், அருகில் கிடந்த கம்பை எடுத்து சங்கர் மற்றும் சித்திரைவேல் ஆகியோரை சரமாரி தாக்கினார். பதிலுக்கு அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து சுந்தர்ராஜை  தாக்கினர். 

இதையடுத்து சுந்தர்ராஜ்  தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே,  5-க்கும் மேற்பட்டோர் அரிவாள்  உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து சங்கர் மற்றும் சித்திரைவேல் ஆகியோரை அரிவாளால் 
வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும், அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த சித்திரைவேலுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பினர் மோதலில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டி.எஸ்.பி.ஆறுமுகம், கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் இன்று காலை சுந்தர்ராஜை கைது செய்தனர். மற்ற 5 பேரையும் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News