செய்திகள்

கடையம் அருகே வேன் கவிழ்ந்து வாலிபர்- கைக்குழந்தை பலி

Published On 2018-06-29 13:02 GMT   |   Update On 2018-06-29 13:02 GMT
கடையம் அருகே இன்று வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் மற்றும் கைக்குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி:

நெல்லை மேலப்பாளையம் அருகேயுள்ள தருவையை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது25) . கூலி தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை ஒரு வேனில் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றார். அந்த வேன் கடையம் அருகேயுள்ள திரவியபுரம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் நின்ற மரத்தில் மோதி கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த முத்துச்செல்வம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் வேனில் இருந்த பாலமுருகன் என்பவரின் ஒரு வயது குழந்தை பிரீத்தி பாலா உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதுபற்றி கடையம், பாவூர்சத்திரம் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவர்களில் குழந்தை பிரீத்தி பாலா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தது. காயம் அடைந்த சுகன்யா(15), புவனேஷ்(13), முத்துச்செல்வி(23), வான்மதி(19), பால்மாரி(10) ஆகிய 5 பேருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதில் சுகன்யா உடல்நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பலியான முத்துசெல்வம், பிரீத்திபாலா உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News