செய்திகள்

முதலியார்பேட்டையில் பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-06-27 13:28 GMT   |   Update On 2018-06-27 13:28 GMT
புதுவை வேல்ராம்பட்டில் மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு திருப்பதி பாலாஜி நகரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி ஜானகி (37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சசிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

அதேபோல் நேற்றும் சசிகுமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் அவரது மனைவி வேலைக்கு செல்லாமல் இப்படி மது குடித்து விட்டு வந்தால் பிள்ளைகளை யார் கவனிப்பது? அவர்களது படிப்பு செலவுக்கு என்ன செய்வது? என திட்டினார்.

இதனால் மனவேதனை அடைந்த சசிகுமார் நேற்று மாலை வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்து மனைவி, மகள்கள் வேகமாக வந்து தீயை அணைத்து புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிகுமார் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு செஞ்சிவேல் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News