செய்திகள்

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விவசாயி பலி: நண்பர்கள் 2 பேர் படுகாயம்

Published On 2018-06-25 16:49 GMT   |   Update On 2018-06-25 16:49 GMT
தேன்கனிக்கோட்டை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தார். அவருடைய நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதிக்கு தனது நண்பர்கள் விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருடன் காரில் சென்றார்.

அங்கு அவர்கள் வனப்பகுதியை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை சுரேஷ் ஓட்டி வந்தார். உனிசெட்டி அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுரேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்ரம், அனுமந்தகவுடா ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இறந்த சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன் கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News