செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

Published On 2018-06-23 17:46 GMT   |   Update On 2018-06-23 18:11 GMT
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
விருதுநகர்:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பா.ஜ.க. நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சோலையப்பன், நகர தலைவர் செந்தில் குமார், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள் கஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

நள்ளிச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். சாத்தூர் ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் நடந்த விழாவில், கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆசனங்களை செய்தனர். கல்லூரி முதல்வர் கணேஷ்ராம் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை என்.சி.சி. தலைமை அதிகாரி கர்னல் அன்சார் முகமது, என்.சி.சி. பொறுப்பாளர் பாண்டியராஜன் செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில், பள்ளி தாளாளர் குருவலிங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிர்வாக அலுவலர் அழகர்சாமி, பள்ளி முதல்வர் கமலா, துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜ் செய்திருந்தார்.

வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டி எஸ்.பி. மாடர்ன் பள்ளியில், பள்ளி தாளாளர் பார்வதி சுந்தரராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயக்குனர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியை ரமாபிரபா, புஷ்பா, உடற்கல்வி ஆசிரியர் நிக்‌ஷன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

விருதுநகர் காமராஜ் என்ஜினீயரிங் கல்லூரி நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக அம்பாள் முத்துமணி கலந்து கொண்டு பேசினார். விழாவில் கல்லூரி செயலாளர் மகேஷ்குமார், முதல்வர் ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். யோகா பயிற்சியாளர் கந்தசாமி மற்றும் பெங்களூரு வாழும் கலை மையத்தின் யோகா பயிற்சியாளர் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு யோகாசனங்களை கற்றுக்கொடுத்தார். பள்ளி தாளாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தலைமை முதல்வர் பாலசுந்தரம், முதல்வர் அம்பிகாதேவி, துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சிவகாசி நாயக்கர் மகமை பண்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். விழாவில் பள்ளியின் தலைவர் சுப்புராஜ் செயலாளர் ரவி, பொருளாளர் ராஜாராம், இணைசெயலாளர்கள் ராஜப்பன், பாலாஜி மற்றும் ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் தலைவர் திருப்பதிராஜ், செயலாளர் ரவீந்திரன் மற்றும் பொருளாளர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News