செய்திகள்

ரசாயன கல் பீதி: வத்தலக்குண்டுவில் மாம்பழம் விலை வீழ்ச்சி

Published On 2018-06-22 12:22 GMT   |   Update On 2018-06-22 12:22 GMT
வத்தலக்குண்டு பகுதியில் ரசாயனக்கல் பீதியால் மாங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இவை அனைத்தும் செழித்து வளர்ந்து நல்ல விளைச்சல் கண்டுள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மாங்காய்களை மதுரை சாலையில் உள்ள கமிசன் கடையில் விற்பனை செய்வது வழக்கம்.

பொதுவாக மாங்காய்கள் பழுத்து மாம்பழங்களாக ஒருவாரம் காத்திருக்க வேண்டும். ஆனால் விரைவில் பழுக்க வைக்க சில வியாபாரிகள் ரசாயனகல் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் மாங்காய்கள் ரசாயனகல்லில் உள்ள வீரியத்தால் ஒரேநாளில் பழுத்து விடுகிறது. ஆனால் இதனை சாப்பிடும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வயிற்றுவலி உள்ளிட்ட உடல்உபாதைகள் ஏற்படுகிறது.

மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே மாம்பழம் சாப்பிடுவதை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் 10 முதல் 15 மாம்பழ பெட்டிகள் கொள்முதல் செய்த வியாபாரிகள் ஒரு பெட்டி வாங்குகின்றனர். மேலும் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்பட்ட மாம்பழங்கள் தற்போது ரூ.10க்கு விற்பனையாகிறது. எனவே விவசாயிகள் மாம்பழங்களை என்ன செய்வது என தெரியாமல் சாலையோரங்களில் வீசிச்செல்கின்றனர்.

மழை இல்லை என்றால் வறட்சியால் பாதிப்பு. ரசாயனகல் பீதியால் நல்ல விளைச்சல் இருந்தபோதும் போதிய அளவு விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

Tags:    

Similar News