செய்திகள்

ஆரணியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை: சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Published On 2018-06-21 16:33 GMT   |   Update On 2018-06-21 16:33 GMT
ஆரணியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 8 பணியாளர்களுக்கு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டது.
ஆரணி:

ஆரணி நகரில் எங்கும் குப்பை கூளமாக இருப்பதாக நேற்று முன்தினம் ‘தினத்தந்தி’யில் நகர்வலம் பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதுதொடர்பாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஸ்டான்லிபாபு, பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் தேவநாதன், சுகாதார அலுவலர் (பொறுப்பு) பழனிச்சாமி மற்றும் அலுவலர்களுடன் நகரில் குப்பைகள் தேங்கி கிடக்கும் பகுதிகளுக்கு அழைத்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் தலைமையில், நகராட்சியில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யார் போன் செய்தாலும் பதில் அளிக்காத சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்தும், மேலும் சுகாதார ஆய்வாளர் பாலாஜி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், மாசிலாமணி, ஜோதிவேலு, வருவாய் ஆய்வாளர் தேவராஜ், குத்தகை இனங்களை முறையாக வசூலிக்காத காரணத்தால் பில் கலெக்டர்கள் சரவணன், விஜயபிரபாகரன், குப்பைகளை லாரி மூலம் முறையாக அகற்றாத டிரைவர் இந்திராபாண்டியன் ஆகிய 8 பேருக்கு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டது. சரியான விளக்கம் அளிக்கவில்லையெனில் இவர்கள் மீதும் பணியிடை நீக்கம்(சஸ்பெண்டு) நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயகுமார் கூறினார்.

மேலும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாலும், அதிலும் வயது முதிர்ந்தோர் அதிகம் இருப்பதாலும் நகரில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் காணப்படுவதால் அவற்றை அள்ளுவதற்காக ஆற்காடு, ராணிப்பேட்டை, செய்யாறு ஆகிய நகராட்சி பகுதிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வாகனத்துடன் வருகை தந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News