செய்திகள்
குளச்சல் அருகே போலீஸ்காரரால் கடத்தப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை
போலீஸ்காரரால் கடத்தப்பட்ட மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியை அனுப்பி வைத்துள்ளனர்.
குளச்சல்:
ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சமீபத்தில் பிளஸ்-2 படித்து முடித்தார். இதைத் தொடர்ந்து அவர் நர்சிங் படிக்க விரும்பியதால் குருந்தன் கோடு அருகே உள்ள கோவில்விளையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார்.
மேலும் நர்சிங் படிக்கவும் அவர் விண்ணப்பம் செய்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டில் இருந்து அந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் இது பற்றி அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த மாணவியை அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடினார்கள். ஆனாலும் அவர் எங்குச் சென்றார் என்று தெரியவில்லை. இதைத் தொடர்ந்து குளச்சல் மகளிர் போலீசில் தனது மகளை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரும்படியும் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான மாணவி திடீரென குளச்சல் மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
இதைத் தொடர்ந்து அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மாணவி தான் மாயமானது பற்றி முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அந்த மாணவியும், நெல்லையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியை அந்த போலீஸ்காரர் கடத்திச் சென்றதும், பிறகு போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த மாணவியை அவர் விட்டு விட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த மாணவியை நாகர்கோவிலில் உள்ள நல்வாழ்வு மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அந்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.