செய்திகள்

இன்று சர்வதேச யோகா தினம்- புதுவை கடற்கரை சாலையில் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற யோகா

Published On 2018-06-21 09:40 GMT   |   Update On 2018-06-21 09:40 GMT
புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் யோகா தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். #InternationalYogaDay2018
புதுச்சேரி:

உலகம் முழுவதும் இன்று 4-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் யோகா தினம் நடந்தது. கடற்கரை சாலையில் இன்று காலை 7 மணிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 500 கல்லூரி மாணவர்கள், 500 யோகா ஆர்வலர்கள் பங்கேற்ற யோகா செயல்விளக்கம் நடந்தது.

ஈஷா யோகா மையத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் மேடையிலிருந்து யோகா செயல்விளக்கம் அளிக்க அதனை மாணவர்கள் பின்பற்றி செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சாத்விநிரஞ்சன் ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் பாலன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையாளர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலர் கந்தவேலு, சுற்றுலாத்துறை செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

யோகா தினத்தையொட்டி ஆயுஷ் மருத்துவ கண்காட்சி கடற்கரை சாலை கைவினை அங்காடியில் இன்று தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

யோகா தினத்தை முன்னிட்டு புதுவை கவர்னர் மாளிகையில் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடந்தது.

காலாப்பட்டு சிறையில் கைதிகளுக்கு யோகா செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதை பின்பற்றி கைதிகள் யோகா செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டார்.

இதேபோல ஜிப்மர் கலையரங்கில் யோகா தேசிய கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை நடந்தது. இந்த பயிற்சியை மத்திய மந்திரி சாத்விநிரஞ்சன் ஜோதி தொடங்கி வைத்தார். கவர்னர் கிரண்பேடி, ஜிப்மர் இயக்குனர் டாக்டர் விவேகானந்தன், திட்ட இயக்குனர் பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #InternationalYogaDay2018
Tags:    

Similar News