செய்திகள்

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 44 ஆயிரம் பேர் விண்ணப்பம்- 28-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு

Published On 2018-06-20 07:26 GMT   |   Update On 2018-06-20 07:26 GMT
மருத்துவ படிப்பு சேருவதற்கு நேற்று மாலை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் 44 ஆயிரம் பேர் விண்ணப்பத்தினர். 28-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தெரிவிரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் மதிப்பெண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 10 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2900 இடங்களில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு (455 எம்.பி.பி.எஸ் இடங்கள்) போக மீதமுள்ள 2445 இடங்களும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 783 அரசு ஒதுக்கீடு இடங்கள், அண்ணாமலை பல்கலைக்கழக இடங்கள் 127 என மொத்தம் 3,355 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாணவ- மாணவிகள் இடையே ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பெரும் தடையாக இருந்து வருவதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க நேற்று மாலை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. 43,935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடைசி நாளான நேற்று மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. ஜாதிகளுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டினை பின்பற்றி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதற்கான பணிகள் இன்று தொடங்கிவிட்டன.

5 நாட்களில் இந்த பணி நிறைவடைந்துவிடும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் அவர்களுக்கு உரிய ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிரித்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு 28-ந்தேதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து ஜூலை 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரப்பப்படும். 2-வது கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரப்பப்படும் என்று மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார்.

மருத்துவ கலந்தாய்வு ஓமந்துரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் நடைபெறுகிறது. எந்தெந்த தேதியில் யார் யார் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் எஸ்.எம்.எஸ் மற்றும் இ.மெயில் வழியாக அனுப்பப்படுகிறது.
Tags:    

Similar News