செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - 3வது நீதிபதி விமலா நாளை விசாரணை

Published On 2018-06-19 15:42 IST   |   Update On 2018-06-19 15:45:00 IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதி விமலா நாளை தனது விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த , டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புக்களை வழங்கினர்.

சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது. அவரது உத்தரவில் உள்நோக்கம் இல்லை. போதிய கால அவகாசம் வழங்கிய பின்னர்தான் 18 பேர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால், அந்த உத்தரவில் தலையிட முடியாது. அந்த உத்தரவு சரிதான் என்று தலைமை நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இதற்கு நேர் மாறான தீர்ப்பை நீதிபதி எம்.சுந்தர் வழங்கினார். அவர் சபாநாயகர் உள்நோக்கத்துடன் தான் உத்தரவு வழங்கியுள்ளார். அதனால், அவரது உத்தரவை ரத்து செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நீதிபதி எஸ்.விமலா, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News