செய்திகள்

சொகுசு கார் இறக்குமதி வழக்கு - நடராஜன் இறப்பு சான்றிதழை சமர்பிக்க எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-06-19 14:00 IST   |   Update On 2018-06-19 14:00:00 IST
சொகுசு கார் இறக்குமதி வழக்கிலிருந்து நடராஜனை விடுவிக்க அவரது இறப்பு சான்றிதழை வருகிற 27ந்தேதி தாக்கல் செய்யுமாறு எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சசிகலாவின் கணவர் நடராஜன், கடந்த 1994-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்தார். புதிய கார் என்றால், அதிக வரி செலுத்த வேண்டும் என்பதற்காக, இந்த கார் 1993-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்ததாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இதனடிப்படையில், இதே குற்றச்சாட்டுக்காக மத்திய அமலாக்கப்பிரிவு தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நடராஜன் உள்பட பலர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடராஜன் இறந்து விட்டதாகவும், அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அவரது வக்கீல் வாதிட்டார். இதையடுத்து நடராஜனின் இறப்பு சான்றிதழை வருகிற 27ந்தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.

சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், நடராஜன் உள்ளிட்டோர் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News