செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2018-06-17 22:40 GMT   |   Update On 2018-06-17 22:40 GMT
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு பருவமழை இந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது. அதில் இருந்து கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடகா மற்றும் கேரளாவில் நல்ல மழை பெய்து கொண்டு இருக்கிறது. தமிழகத்திலும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்கிறது.இந்த நிலையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஆணைக்காரன்சத்திரம் 11 செ.மீ., ஸ்ரீமுஷ்ணம் 8 செ.மீ., தஞ்சாவூர், மேட்டூரில் தலா 7 செ.மீ., வால்பாறை 6 செ.மீ., செங்கோட்டை, சின்னக்கல்லாறு, கே.எம்.கோவிலில் தலா 5 செ.மீ., தேவலா, திருமங்கலம், கொல்லிமலை, சிதம்பரம், நிலக்கோட்டையில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது. 
Tags:    

Similar News