செய்திகள்

சென்னை வந்த ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் கண்டெடுப்பு

Published On 2018-06-16 17:22 IST   |   Update On 2018-06-16 17:22:00 IST
சென்னை சென்ட்ரல் வந்த திருவனந்தபுரம் ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #ChennaiTrain #Bullets
சென்னை:

கேரள மாநிலம் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதிலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர்.

அதன்பின்னர், ஊழியர்கள் ரெயில் பெட்டியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பி-2 என்ற பெட்டியில் ஊழியர்கள் சுத்தப்படுத்திய போது, 8-ம் எண் இருக்கைக்கு கீழ் சுருட்டப்பட்ட காகித பொட்டலம் ஒன்று இருப்பதை கண்டனர். அதை எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதில் வெடிக்கப்படாத 3 துப்பாக்கி குண்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த துப்பாக்கி குண்டுகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகள் ரெயிலில் துப்பாக்கி குண்டுகள் கிடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #ChennaiTrain #Bullets
Tags:    

Similar News