செய்திகள்

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக அதிகாரி மீது செக்ஸ் புகார்- கலெக்டர் விசாரணை

Published On 2018-06-14 12:32 GMT   |   Update On 2018-06-14 12:59 GMT
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரி மீதான செக்ஸ் புகார் குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு அலுவலகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுகிழமை அத்தியாவசிய பணிக்காக பெண் ஊழியர் ஒருவர் பணிக்கு வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று அலுவலகத்தில் மற்ற பணியாளர்கள் யாரும் இல்லை. அந்த பெண் ஊழியரும் அவரது மேல் அதிகாரியும் மற்றும் சிலரும் மட்டுமே இருந்தனர்.

அப்போது மேல் அதிகாரி, அந்த பெண் ஊழியரை அவரது அறைக்கு அழைத்து அவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது பற்றி நேற்று அந்த பெண் ஊழியர் கலெக்டர் அலுவலக உயர் அதிகாரியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார். இதையடுத்து பெண் ஊழியர் புகார் கூறிய அதிகாரியை அழைத்து உயர் அதிகாரி நேற்று விசாரணை நடத்தினார்.

அப்போது அந்த அதிகாரி தன் மீது வேண்டுமென்றே பெண் ஊழியர் புகார் கூறுவதாகவும், தனக்கும் இப்பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் மறுத்தார்.

எனவே இப்பிரச்சினை குறித்து விரிவான விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக புகார் கொடுத்தவர் மற்றும் புகார் கூறப்பட்டவர் ஆகிய இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்க ஏற்பாடு நடந்தது.

இந்நிலையில் பெண் ஊழியருக்கு ஆதரவாக அலுவலக ஊழியர்கள் இப்பிரச்சினையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் இப்பிரச்சினை குறித்து நேரில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார். இதனால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Tags:    

Similar News