செய்திகள்
பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி எர்ணாவூர் நாராயணன் தலைமையில் மாணவர்கள்-பொதுமக்கள் மறியல்
பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி எர்ணாவூர் நாராயணன் தலைமையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் இன்று எர்ணாவூர்- எண்ணூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்:
சென்னை எர்ணாவூரில் நகராட்சிக்கு சொந்தமான உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கட்டிடம் கட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது ரூ.1 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்டிடம் கட்டப்படவில்லை.
இந்த நிலையில் அந்த பள்ளிக் கட்டிடத்துக்கு கட்டிடம் கட்டித்தரக்கோரி எர்ணாவூர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எர்ணாவூர் நாராயணன், செயலாளர் சசிதரன், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகி மாடசாமி தலைமையில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் இன்று எர்ணாவூர்- எண்ணூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் விரைந்து வந்து அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.