கூத்தாநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறை காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது.
கூத்தாநல்லூர் பகுதியில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தில் பணி செய்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
கூத்தாநல்லூர் அருகே உள்ள மேலகொண்டாளி பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 35). இவரது மனைவி பூங்குழலி. இவர்களுக்கு பூபாலன், தருண் என்ற 2 மகன்கள் உள்ளனர். தங்கபாண்டியன் மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று கூத்தாநல்லூர் இஸ்மாயில் தெருவில் சூறை காற்றில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த கம்பியில் எதிர்பாராத விதமாக அவரது கைபட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அவரது மனைவி பூங்குழலி கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews