செய்திகள்

கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பின்போது இறந்தவர் குடும்பத்துக்கு வட்டியுடன் ரூ.10 லட்சம் இழப்பீடு

Published On 2018-06-10 01:59 GMT   |   Update On 2018-06-10 01:59 GMT
கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பின்போது இறந்த தொழிலாளர் குடும்பத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை வழங்கமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தவிட்டது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன், தாக்கல் செய்த மனுவில், ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தற்போதும் நீடித்து வருகிறது. கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 100-க்கும் மேற்பட்டோர் இந்த பணியின் போது பலியாகி உள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மறுவாழ்வு கிடைக்கவும் உத்தவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கழிவுநீர் தொட்டி, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அதே வேலையில் ஈடுபடுவதை தடுக்க அரசு மாற்று வேலை வழங்க வேண்டும் என்றும் கடந்த 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. இதுபோன்ற ஆபத்தான தொழிலைச் செய்பவர்களைத் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையை 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News