செய்திகள்

நாகையில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-06-07 22:21 IST   |   Update On 2018-06-07 22:21:00 IST
நாகையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், சுற்றுச்சூழல் தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஐ.நா. சபை இந்தாண்டு சுற்றுச்சூழல் தினத்தை இந்தியா முன் நின்று நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு, “பிளாஸ்டிக் மாசு முறியடிப்போம்“ என்ற கருப்பொருளை கொண்டு சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது என்றார்.

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் பிரதான வீதிகளின் வழியாக சென்று கிழக்கு கடற்கரை சாலையில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் நாகை தனியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். முன்னதாக உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழியினை கலெக்டர் சுரேஷ்குமார் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பள்ளி முதல்வர் ஜெயகணபதி, ஊர்க்காவல் படை துணை தளபதி வினோதினி, ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News