செய்திகள்

வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்: இளம்பெண் பலி

Published On 2018-06-03 15:50 GMT   |   Update On 2018-06-03 15:50 GMT
வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). இவரும், இவரது மனைவி சத்யா (25) மற்றும் இவருடைய மாமன் மகன் நாகராஜ்(25) ஆகிய 3 பேரும் இன்று காலை சொந்த வேலை காரணமாக ஆத்தூரில் இருந்து சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

இந்த மோட்டார் சைக்கிளை செல்வம் ஓட்டினார். வாழப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று லாரியை முந்திச்செல்ல முயன்றது. இதில் கார் நிலைதடுமாறி செல்வம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் நொறுங்கி, சத்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

அவரது கணவர் செல்வம் மற்றும் உறவினர் நாகராஜ் ஆகிய இருவரும் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அடிப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கும், நாகராஜை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் போலீசார் காரை பறிமுதல் செய்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News