செய்திகள்

செங்கத்தில் பலத்த மழை - மின்சாரம் தாக்கி மாணவன் பலி

Published On 2018-06-02 08:16 GMT   |   Update On 2018-06-02 08:16 GMT
செங்கத்தில் பலத்த சூறை காற்றுடன் கொட்டித்தீத்த மழையால் வீட்டின் மேற்கூரை மீது முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி மாணவன் பலியானான்.
செங்கம்:

செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 45) இவரது மனைவி கார்த்திகா (37) தம்பதியின் மகன் தனுஷ் (15) 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை செங்கம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. அப்போது தனுஷ் வீட்டின் அருகே இருந்த மரம் முறிந்து அவரது வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது.

அந்த மரக்கிளையை அப்புறப்படுத்துவதற்காக தனுஷ் வீட்டின் மேற்கூரை மீது ஏரி மரக்கிளையை பிடித்து தூக்கினார். அப்போது எதிர்பாராமல் மேலே சென்ற மின் கம்பி மீது மரக்கிளை உரசி தனுஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் தூக்கி வீசபட்ட தனுஷ் பலத்த காயமடைந்தார்.

அவரை மீட்ட உறவினர்கள் செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தனுஷ் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணியிலும் சேற்று கனமழை பெய்தது. இதில் மார்க்கெட்டில் இருந்த 3 கடைகள் சேதமடைந்து இன்று காலை இடிந்து விழுந்தது. விடியற்காலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்:-

நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் கட்டிடம் கட்டி 37 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் பெரும்பாலான கடைகளில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த கடைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News