செய்திகள்

ராயபுரம் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீர் மரணம்

Published On 2018-06-01 07:10 GMT   |   Update On 2018-06-01 07:10 GMT
ராயபுரம் ஆஸ்பத்திரியில் குழந்தைபெற்ற பெண் திடீர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டை தோட்டத்தை சேர்ந்தவர் முகமது யாசின். தொழிலாளி. இவரது மனைவி இர்ஷாத் (வயது 21) இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் இர்ஷாத் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக அவரை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 30-ந் தேதி அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

இதற்கிடையே நேற்று காலை முதல் இர்ஷாத்தின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதுபற்றி உடன் இருந்த உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இர்ஷாந்தின் நிலைமை குறித்து சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதுபற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

இர்ஷாந்துக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி ஆஸ்பத்திரி அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராயபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணியளவில் இர்ஷாத் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயத்திடம் கேட்ட போது, “இர்ஷாத்துக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரிக்கப்படும். தவறு நடந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Tags:    

Similar News