செய்திகள்

ஓடும் பஸ்சில் ஜிப்மர் ஊழியரிடம் ஜேப்படி செய்த இளம்பெண் கைது

Published On 2018-05-30 10:29 GMT   |   Update On 2018-05-30 10:29 GMT
ஓடும் பஸ்சில் ஜிப்மர் ஊழியரிடம் ஜேப்படி செய்த இளம்பெண் கையும் களவுமாக சிக்கினார்.

புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி ஞானு தியாகு நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி அஞ்சம்மாள் (வயது 26). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஜிப்மரில் பணி முடித்து அரசு டவுன் பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது பஸ்சில் அஞ்சம்மாள் அமர்ந்து இருந்த இருக்கை அருகே பயணம் செய்த ஒரு இளம்பெண் நைசாக அஞ்சம்மாள் வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிபர்சை எடுத்தார். இதனை பார்த்து விட்ட அஞ்சம்மாள் மற்ற பயணிகளின் உதவியோடு அந்த பெண்ணை கையும்- களவுமாக பிடித்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தார்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் அன்பழகன் ஆகியோர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜேப்படி செய்த பெண் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி தேன்மொழி (வயது 20) என்பது தெரியவந்தது.

இதையொட்டி தேன்மொழியை கைது செய்தனர். போலீசார் இதுபோல அவர் வேறு யாரிடமாவது கைவரிசை காட்டினாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News