செய்திகள்

கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

Published On 2018-05-28 16:38 IST   |   Update On 2018-05-28 16:38:00 IST
கோவை அருகே தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் கோவில் பாளையம் தவைய காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரூபன்(31). தொழில் அதிபர். இவரது வீட்டில் விஷேசத்துக்காக உறவினர்கள் சிலர் வெளியூரில் இருந்து வந்திருந்தனர். நேற்று ரூபன் அவர்களை அழைத்து கொண்டு கோவைக்கு வந்து விட்டார்.

இன்று அதிகாலை அவர் மீண்டும் ஊருக்கு திரும்பிய போது வீட்டின் உள்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 40 பவுன் தங்கநகை, ரூ.1 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது. இதையடுத்து கோவில் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் துப்புறியும் மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

கோவில்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 5 இடங்களில் அடுத்தடுத்த கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் துப்பு துலங்குவதற்கு முன்பு மீண்டும் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே கோவில் பாளையம் பகுதியில் நடக்கும் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஜெயக் குமார் (வயது 64). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றார். இன்று காலை வீடு திரும்பிய போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், வாட்ச் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. வீட்டில் ஆள் இல்லாததை கண்காணித்து கொள்ளையர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News