செய்திகள்

ராஜபாளையம் அருகே ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை

Published On 2018-05-28 10:07 GMT   |   Update On 2018-05-28 10:07 GMT
ஆட்டோ டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது சகோதரர் செல்வம். ஆட்டோக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களிடம் தளவாய்புரம் அருகே உள்ள அம்மையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் அய்யனார் (வயது 27) என்பவர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் புளியங்குடிக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்ற அய்யனார், அங்கு ரோட்டோரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் இருந்து பேட்டரியை எடுத்து விற்றுவிட்டு தலை மறைவானார்.

பின்னர் மாரிமுத்துவும், செல்வமும் புளியங்குடியில் ஆட்டோ நிற்பதை கண்டறிந்து அதனை மீட்டனர்.

இது தொடர்பாக சகோதரர்கள் இரண்டு பேரும் அய்யனார் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு எச்சரித்துவிட்டு வந்துள்ளனர்.

இதனிடையே நேற்று நடந்த தேவதானம் பெரிய கோவில் தேர்த்திரு விழாவில் பங்கேற்பதற்காக அய்யனார் வந்திருப்பதாக மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்றார். அப்போது அய்யனார் சேத்தூர்-தேவதானத்துக்கு இடையே உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் இருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்து சென்ற மாரிமுத்து, ஆட்டோ குறித்து அய்யனாரிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

படுகாயம் அடைந்த அய்யனாரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரிமுத்துவை தேடி வருகிறார்.

Tags:    

Similar News