கொடைக்கானல், பழனியில் தொடர் மழையினால் வேகமாக நிரம்பும் அணைகள்
பழனி:
கொடைக்கானலில் அக்னிநட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை மழை பெய்யத் தொடங்கியது. அதன்பிறகு தினந்தோறும் மாலையில் சாரல் மழையும், இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
தற்போது தொடர் விடுமுறை காரணமாகவும் மலர் கண்காட்சியை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை வந்த வண்ணம் உள்ளனர்.
மழை பெய்தாலும் சுற்றுலா பயணிகள் நனைந்தவாறும், குடைபிடித்து சென்ற படியும் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதனிடையே கொடைக்கானல் மற்றும் பழனியில் பெய்து வரும் தொடர் மழையினால் பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை முதல் இரவு வரை திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் பழனி மற்றும் கொடைக்கானலிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
கொடைக்கானல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணைகள் இரண்டும் நிரம்பும் நிலையை அடைந்துள்ளன. இதேபோல் கொடைக்கானல் ஏரி நிரம்பி மறுகால் செல்கிறது.
பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்தேக்கமும் நிரம்பி வருகிறது. வரதமாநதி அணைக்கு வினாடிக்கு 132 கன அடி தண்ணீர் வருகிறது. 66.47 அடி உயரம் உள்ள இந்த அணையில் தற்போது 40 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
இதேபோல் பாலாறு பொருந்தலாறு அணை, குதிரையாறு, பரப்பலாறு ஆகிய அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Rain