செய்திகள்

வாடிப்பட்டியில் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2018-05-26 11:38 GMT   |   Update On 2018-05-26 11:40 GMT
வாடிப்பட்டியில் வீட்டை உடைத்து நகை - பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஆண்டார் (வயது58). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மதுரை கூடல்நகரில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய ஆண்டார், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் ஆண்டார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News