செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2018-05-26 02:55 GMT   |   Update On 2018-05-26 02:55 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.#SterliteProtest #Samathuva Makkal Katchi
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் அக்கட்சியின் தலைவர்ஆர்.சரத்குமார் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் எம்.ஏ.சேவியர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஏ.என்.சுந்தரேசன் பேசியதாவது:-

தூத்துக்குடி மக்கள் 100 நாள் அறவழியில் போராட்டம் நடத்தினர். இதுவரை தமிழகத்தில் நடந்த போராட்டம் அமைதியான முறையில் தான் நடந்துள்ளது. ஆனால் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு - தடியடியில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல், இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி துணை செயலாளர் என்.ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட செயலாளர்கள் முருகேசபாண்டியன், தக்காளி எம்.முருகேசன் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் டிக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். #SterliteProtest
Tags:    

Similar News