வேதாரண்யத்தில் தம்பியை தாக்கிய அண்ணன் உள்பட 2 பேர் மீது வழக்கு
வேதாரண்யம்:
வேதாரண்யம் மேலவீதியில் வசிப்பவர்கள் குமரசாமி (வயது 55), குமரேசமூர்த்தி (54). இருவரும் சகோதரர்கள். குமரேசமூர்த்தி அரசு கல்லூரி பேராசிரியர்.
குமரசாமி வேதாரண்யத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவர் மேல வீதியில் உள்ள கடை மற்றும் வீடுகளை சமமாக பிரித்துக்கொண்டனர். இதில் மேலத்தெருவிற்கு செல்ல பொதுப்பாதை ஒன்று இருந்து வருகிறது.
இந்த பொதுப்பாதையில் தென்னை மட்டைகளை குமரசாமி போட்டிருந்தாராம். இதை அவரது தம்பி குமரேசமூர்த்தி அப்புறப்படுத்தியுள்ளார். இதை குமரசாமி தட்டிக்கேட்டதில் தகராறு ஏற்பட்டு குமரேசமூர்த்தியை குமரசாமியும், அவரது நண்பரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த குமரேசமூர்த்தி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதேபோல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ள குமரசாமியும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.